November 21, 2011

லண்டன் மாரியம்மன் கோவில் தேர் தீவைத்து அழிப்பு! காணொளி இணைப்பு

சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக  லண்டன் ரூட்டிங் பகுதியில் இயங்கி வரும் அருள்மிகு லண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் கடந்த 16 ஆம் தேதி இரவு 11 மணியளவில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இரவு 9 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, சித்திரத் தேரைத் தீவைத்து அழித்துள்ளனர்.

இச்சம்பவத்தைக் கண்ட பக்கத்தில் உள்ளவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்புப்படையினரும் செயற்பட்டு தீயை ஏனைய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவுக்கு எரிந்துவிட்டது. 

நான்கு பேர்களால் நடத்தப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாடுகள் அனைத்தும் துல்லியமாக திருக்கோயில் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகள் அனைத்தும் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. 

நீதிமன்றம் கட்டிடத்தில் இருந்து உடனடியாகத் திருக்கோயிலை வெளிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க  அம்பாளுக்குச் சொந்தமாக நிலம்  வாங்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வாலயம் தனியாக வழிபாட்டுத்தலமாக அமையாது தமிழர்களின் கலாசார சின்னமாகவும், இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...